18/4/17

ஹார்ட் பிரேக்கிங் நீயூஸ்



நாள் முழுவதும் செய்திகளை மட்டுமே தந்துகொண்டிருக்கும் செய்தி சானல்கள் இப்போது பெருகிக்கொண்டேயிருக்கிறது. யார் எந்தச்செய்தியை முந்தித்தருவது என்பதிலிருக்கும் போட்டி, இப்போது செய்தி அறிவிப்பாளர்களின் பணியை சவாலானதாக்கியிருக்கிறது. தயாரிக்ப்பட்டு வாசித்துக்கொண்டிருக்கும் செய்திகளுக்குக்கிடையே தன் முன்னே இருக்கும் ஸ்கிரின்லின் வரும் செய்திமின்னல்களையும் உடனே மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் , இதை பிரேக்கிங் நீயூஸ் என்று ஆங்கிலத்தில்சொல்லுகிறார்கள். சில சமயம் இம்மாதிரி செய்திகளில் அறிவிக்கப்படும் கோரவிபத்துகள் கேட்பவர்களை உலுக்கும்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் மிகவும் செய்தி சானலான IBC 24 யில் மிகவும் பாப்புலரான செய்தி வாசிப்பாளர் திருமதி சுப்ரீத் கவுர். தெளிவான குரல், தீர்க்கமான உச்சரிப்பால் அவருக்கு விசிறிகள் அதிகம்
அன்றும் வழக்கம்போல காலை பத்துமணி செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தவரின் முன்னே இருக்கும் ஸ்கீரினில் பிளாஷ் ஆன செய்தி ரெய்ச்சூர் பிரதான சாலையில் நிலநிமிடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு மோசமான கார் விபத்து. அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம், மற்ற இருவரின் நிலை கவலைக்கிடம். கார் குறித்து வந்த விபரங்களிலிருந்தும், படங்களிலிருந்தும் சுப்பீரீத்தை தாக்கிய விஷயம் உருக்குலைந்த அந்த கார் அவர்களுடையது, சம்பவ இடத்திலிருக்கும் செய்தியாளருக்கு இறந்தவர்களின் பெயர்கள் தெரியவில்லை. . அதை போலீஸ் அறிவிக்க அவர் காத்திருக்கிறார். ஆனால் விபத்துக்குள்ளாகி இறந்திருப்பது அவரது கணவர், என்பது சுப்ரீத்துக்கு தெரிந்துவிட்டது வெடித்து அழுதிருக்க வேண்டிய அந்தத் தருணத்தில் குரல் கம்ம அந்தச் செய்தியைச் சொல்லுகிறார்.
நேரலையில் போகும் செய்தி என்பதால் தொடர்ந்து வந்த செய்திகளைச் சொல்லிவிட்டு முடிந்தவுடன் எழுந்து ஓடி செய்தியாளிரிடம் போனில் உறுதிசெய்து கொண்டு கதறிஅழுகிறார். இவர் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் போதே , செய்திப்பிரிவின் ஆசிரியருக்கும் டீமுக்கும் விஷயம் தெரிந்திருந்தது, ஆனால் சுப்ரீத்திடம் அதைச்சொல்ல அவர்களுக்குத் துணிவில்லை.
தன் கணவர் விபத்தில் இறந்த செய்தியை நேரலையில் சொல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இவரைப்போல உலகில் எந்த செய்தியாளருக்கும் நேர்ந்திருக்காது.
அந்தக் கட்டத்திலும் மனதைப் பிசையும் சோகத்தையும் துக்கத்தையும் வெளியே காட்டாமல் தொடர்ந்து 10 நிமிடங்களில் அவர் மற்ற செய்திகளை வாசித்தது அவரின் பணியைச் செய்துமுடித்துவிடவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை இது சதாரணவிஷயம் இல்லை எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. எங்கள் ஊழியர் சுப்ரீத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று சானலலின் தலைவர் சொல்லியிருக்கிறார். இதையே தான் இந்தியாமுழுவதும் இருக்கும் அத்தனை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களும் எதிரொலிக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் செய்துகொண்டிருக்கும் சப்ரீத் அண்மையில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவர்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்