21/6/17

அமெரிக்க அதிபரின் அடுத்த அதிரடி.. !




அதிரடி அறிவிப்பு மன்னராகவே ஆகிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில்  வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், “அமெரிக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை  அறிவித்திருக்கிறார். 
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே காட்டி வருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்த இயலாததாகக் கூறப்படும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைச்சுவர் விவகாரம், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் நீதித்துறையின் மீது வெறுப்புணர்வு,  போன்ற அறிவிப்புகளின் பட்டியலில் லேட்டஸ்ட் இது. 
 அதிவேகமாக மோசமடைந்துவரும் புவியின் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகச்சொல்லும்,  உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்  இந்த அறிவிப்பில் அவர் இந்தியாவைக் குறிப்பாக  தாக்கியிருக்கிறார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோபத்தைப் புரிந்துகொள்ள பாரிஸ் காலநிலை உடன்படிக்கை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது. 
நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயருதல், பேய் - மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை பல வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்டப் பேரவையானது
(United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992-ம் உருவாக்கப்பட்டது. இது, தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆம் 23 ஆண்டுகள் !  உலக நாடுகளுடன்  பல நகரங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்திவந்தது.  ஒரு நாட்டின் கருத்தை சில அல்லது பல நாடுகள் ஏற்காமல் தொடர்ந்து  அடுத்தடுத்த மாநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட விஷயம் இந்த  காலநிலை உடன் படிக்கை.     2015ல் பாரிஸில்  7 நாட்களுக்குத் திட்டமிட்டு 11 நாட்களாக  நீடித்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்  பிறகு, 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த காலநிலை மாநாட்டில்  வரலாற்றுச் சிறப்புமிக்க “பாரிஸ் உடன்படிக்கை” உருவானது.  அது உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. வளரும் நாடுகளின் சார்பாக வாதிட்ட இந்தியா வளர்ந்த நாடுகள் எப்படிச் சூழலை மாசு படுத்தியிபின் வளரும் நாடுகளின் மீது  கட்டுப்பாட்டை கொண்டுவருகிறது என்பதையும். இதைச் செயலாக்க வளரும் நாடுகளுக்குக் கொடுக்க  வளர்ந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வாதாடி வென்றது. 
குறிப்பாகப்  வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கவேண்டும்  என்பது இந்த  உடன் படிக்கையின்  முக்கிய அம்சம். 
இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸைத் தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கியக் காரணமான  வாயுக்களை வெளியிடும் அளவைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன.  இதன் படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
  .இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும்.. வரைவு ஒப்பந்தத்தில் சொல்லியிருந்த படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்பதை ஏற்றால்  இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்த அளவைக் குறைக்க வற்புறுத்தின.  இறுதியில் அதை 1,5 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்க ஒப்புக்கொண்டன. 

அந்த. மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை இந்தியா உள்பட 195 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. “இந்த உடன்பாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது” என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டி. “அனைவரும் ஒன்றானால் என்ன நடக்கும் என்பதை நாம் உலகிற்குக் காட்டியுள்ளோம்” என்று பெருமையுடன் அறிவித்தார்.  தொடர்ந்து நாடுகள். அதிகாரப்பூர்வமாக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.  
இந்த ஒப்பந்தத்திலிருந்தான் விலகுவதாக இப்போது  அறிவித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.  இந்தத் தீர்மானத்தினால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்பது அவரது கணிப்பு.  மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பது தடுக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்களை நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்று,  2020-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்கிக் கொண்டுவிடும் என்பது தான் அவரின் கோபத்துக்கு காரணம்  இப்படி இந்தியாவின் மீது இருக்கும் வெறுப்பும், அதற்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற நிலையும்  இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு காரணம். .
வளர்ந்த நாடுகள் செலுத்தப்போகும் பணம் அவர்கள் சுற்று சூழலின் வெப்பளவை இதுநாள் வரை தொடர்ந்து அதிகரித்தற்காக  தரும் ஈடுதான் என்ற புரிதல் அவருக்கு இல்லை எனச்சொல்லிவிட முடியாது.. அதிபர் தேர்தலுக்கு பல நாள் முன்னரே அவர் தனது டிவிட்டரில் பாரிஸ் மாநாட்டைக் கடுமையாக சாடியிருக்கிறார்.  தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தார். ஆனால்   அவருடைய தேர்தல் அறிக்கையை  பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. 
இந்த அறிவிப்பைப் பல உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமில்லை அமெரிக்காவின்  கூகுள்.  மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும்  கண்டனம் செய்திருக்கின்றனர்.  அவரது கட்சியின் அறிவு ஜீவிகளும் எதிர்க்கிறார்கள். 
 ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் எழும் இந்த மாதிரி உடன்படிக்கைகளிலிருந்து  கையெழுத்திட்ட நாடுகள் வெளியேற விரும்பினால் அதற்கான விதிமுறைகளையும் அதில்  சேர்க்கப்பட்டிருக்கும். அதன் படி இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமானால் அதற்கான ஒராண்டு நோட்டிஸையே 2019 நவம்பரில் தான் கொடுக்க முடியும். அதற்கு ஒராண்டுக்குபின்னர் அதாவது 2020 நவம்பருக்குப் பின்னர்தான் வெளியேற முடியும். டிரம்பின் பதவிக்காலம் 2020 நவம்பர் 4 வரைதான்.
இது அவருக்குத் தெரியாதா?  இதுமட்டுமில்லை. தெரிந்த விஷயங்களையும் தெரியாத மாதிரி அறிவிப்பது தான் அதிரடி அரசியல் என்பதும் அதிபருக்குத் தெரியும். 

9/6/17

டிரம்ப் தான் பிரச்சனையா?



 கடந்த சில வாரங்களாகத் தலைப்பு செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கும் இதைப் பற்றி ஓர் அலசல்
அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு என்ற கோஷத்துடன் தேர்தலில்  வென்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.                     
மேலும், 'வெளிநாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்துப் பணியமர்த்தும் போது, அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடுதல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.
இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
இது எந்தளவுக்கு உண்மை? என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்
இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கையை, அமெரிக்க தேர்தலுக்கு முன்னரே துவங்கிவிட்டன. அமெரிக்க அதிபரின் அறிவிப்பால்  அது தலைப்பு செய்தியாகியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா தலைமைப்பண்பு மாநாட்டில், ஐடி துறைப் பணியாளர்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அடுத்த மூன்றாண்டுகளில் ஐடி துறையில் பணியாற்றும் பலரும் தேவையற்றவர்களாகிவிடுவார்கள். நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களால், 50-60 சதவிகிதம் வரையிலான பணியாளர்களைத் தக்கவைப்பதில் நிறுவனங்கள் கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும். புதிதாகக் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களால், 35 வயதுக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வேலை இழக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன’ எனக் குறிப்பிட்டு, மெக்கின்ஸி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
 ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.
சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப்புகளும், வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவைக் கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கும் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஊழியர் களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இறங்கி யுள்ளது., எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய - ஐ.டி., துறை.     நாஸ்காம்  மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது

ஆட்குறைப்பு காரணம் இது மட்டுமில்லை. நாம் சர்வதேச தேவைகளுக்கெற்ற்ப அப்டேட் ஆக வில்லை என்பது தான்  உண்மை என்கிறார். வா. மணிகண்டன். இவர் பல பயிற்சிகள் பெற்ற பென்பொறியாளர். பங்களூருவில் பணியிலிருக்கிறார்.
“கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை வெகு வேகமாக புதிய பரப்புகளை அடைந்திருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே மொட்டுகளாக இருந்த சொற்கள் எல்லாம் இன்றைக்கு பூத்துக் காயாகி கனியாகி நிற்கின்றன. இந்தத் துறையின் வேகம் அலாதியானது. ஆனால் நாம்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எதைக் கற்றுக் கொண்டிருந்தோமோ அதையே கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திய வேலைச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களும் சரி, மாணவர்களும் சரி புதிய பிரிவுகளைப் பற்றி தெளிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.

இன்றைக்கு மென்பொருள் துறையில் வேலையில் இருக்கிறவர்களின் பெரிய பிரச்சினை தம்மை ஒரு மென்பொருளோடு பிணைத்துக் கொள்வதுதான். ஆரக்கிளிலில் வேலை செய்தால் அதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலை பலருக்கும் இருக்கிறது. மென்பொருள்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமானது இல்லை. இன்றைக்கு ஆரக்கிள் இருக்கிறது. நாளைக்கு டேரக்கிள் என்று புதியதாக ஏதேனும் வரக் கூடும். எந்தவொரு மென்பொருளையுமே பத்து நாட்கள் மண்டையை உடைத்தால் கற்றுக் கொள்ள முடியும். அது பெரிய காரியமே இல்லை. அப்படியென்றால் எது பெரிய காரியம்? நம்முடைய துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது. இன்றைக்கு தொலைத் தொடர்புத்துறைக்கான ப்ராஜக்ட் ஒன்றை .net ஐ வைத்துச் செய்து கொடுத்தால் .netஇல் பிஸ்தாவாக இருப்பதைவிடவும் தொலைத்தொடர்புத் துறையில் பிஸ்தாவாக இருப்பதுதான் பெரிய காரியம். உற்பத்தி (manufacturing), ஊர்தி (automobile) என எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ அதைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும். domain knowledge என்பார்கள். அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்னதான் மென்பொருள் மாறினாலும் சமாளித்துவிடலாம்.

புதிதாக என்ன களம் உருவானாலும் அதை நம் துறையில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிற ஆட்களுக்கு அவசியம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு ஆயிரம் வாய்ப்புகளா என்று கேட்டால், ஆம், ஆயிரம் வாய்ப்புகள்தான். என்கிறார்.
கிபி 2000 ஆம் ஆண்டுவாக்கில் சி, சி++, ஜாவா அதன் பிறகு .net என்று படித்துக்
கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருக்கிறோம். கல்லூரிகளில் இத்தகைய பாடங்களைத்தான் சொல்லித் தருகிறார்கள். Cloud, IoT, Business Intelligence மாதிரியான புதிய களங்களைக் கல்லூரிகள் சொல்லித் தருவதில்லை. சுடச்சுட வளர்ந்து வரும் பிரிவுகளைப் பற்றிக் கற்றுத் தருகிற பயிற்சி நிறுவனங்களும் வெகு குறைவு.  என்கிறார் திரு  குஹன் ரமணன். இவர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை  உலகளவில் மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்.
 எனவே பிரச்சினைகளுக்கு டிரம்ப் மட்டுமே காரணம் இல்லை நிலவும்  டிரெண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்




31/5/17

யார் நமது அடுத்த ஜனாதிபதி ?


இரு அணிகளின் இணைப்பு  நிகழாதிருப்பதைக் கண்டு  ஒபிஎஸ் கலங்கியிருப்பதற்கும், இபிஎஸ் கவலைப்படாதிருப்பதற்கும்  திமுகவின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் கலைஞரின் வைரவிழாவினை அகில இந்திய  கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பதற்கும் ஒரே  காரணம் 

இந்தியாவின் 14வது ஜனாதிபதி யார்? என்ற கேள்விதான்.  
திரு பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017 ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகளை ஜூனில் தொடங்க வேண்டும். 
வெற்றிக்குதேவையானஓட்டுகள்
ஜனாதிபதி தேர்தல் நடந்தால் இந்தியாவில் உள்ள 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 776 எம்பிக்கள் வாக்களிப்பார்கள். எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்குமதிப்பு 5,49,474. எம்பிக்களின் வாக்கு மதிப்பு 5,49,408. ஒட்டுமொத்தமாக எம்பி, எம்எல்ஏக்கள் என 4896 பேர் வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்குமதிப்பு 10,98,882. இதில் பாதிக்கும் மேல் அதாவது 5,49,442 வாக்கு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 5 மாநில தேர்தல்  முடிவுகளில் உபியை பா.ஜனதா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்ட பின்னர்  அதன்  ஜனாதிபதி தேர்தல் வாக்கு வலிமை அதிகரித்துவிட்டது  

தற்போதுள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணி பலம் மக்களவையில் 2,37,888ஓட்டுகளும், ராஜ்யசபையில் 49,560 ஓட்டுகளும், மாநில சட்டப்பேரவையில் 2,39,923 ஓட்டுகளும் உள்ளன. மொத்தம் பா.ஜனதா அணிக்கு தற்போது 5,27,371 ஓட்டுகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகளுக்கு 5,68,148 ஓட்டுகள் உள்ளன. எனவே வித்தியாசம் 40,777 ஓட்டுகள் தான்.
இந்த  40777 ஒட்டுக்களை எப்படியாவது சேகரித்து தங்கள் வலுவைக் காட்ட  பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. அதன் முதல் குறி அதிமுக. காரணம் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு 58,984. இந்த ஓட்டுக்கள் முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ கிடைத்தால்தான்  பா. ஜா காவின் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யமுடியும் 

ஜெயலிதா இருந்திருந்தால் இந்த நிலையையே காட்டி பாஜாகாவையே மிரட்டியிருப்பார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதைக்கூட கையில் எடுத்திருப்பார்.. ஆனால் மாறாக  இன்று  தற்போதைய சூழலில் அதிமுக  இரு அணிகளுமே  பா.ஜனதாவைப் போட்டி போட்டுகொண்டு ஆதரிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அமைச்சர்கள் முறைகேட்டில் சிக்கிய புகார்கள் வருகின்றன. இதனால் உருவாகியிருக்கும்  ஒரு நிலையற்ற தன்மையை தங்களுக்க சாதகமாக பயன்படுத்தக் காய் நகர்த்தத் துவங்கியிருக்கிறது பாஜக . தங்கள் பதவியையும், அரசையும் காப்பாற்ற ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை  ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் கணிப்பு  
தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் திரட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த  ஜனாதிபதி தேர்தலை அதற்கு முன்னோட்டமாகப் பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. . உடல் நலிவுற்ற நிலையிலும் இந்தப் பணிகளில் சோனியாகாந்தி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முதல்கட்டமாக ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பா.ஜனதாவுக்கு எதிரான அத்தனை எதிர்க்கட்சிகளையும் குறிப்பாக உபியில் எதிரும் புதிருமாக திகழும் முலாயம், மாயாவதி, மேற்குவங்கத்தில் மம்தா மற்றும் கம்யூனிஸ்ட் ஆகியோருடனும் கூட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டார்.  தொடர்ந்து திமுக வின் ஆதரவைகேட்ட நிலையில் எழுந்த எண்ணம் தான்  ஜூன் 3ல் கருணாநிதி பிறந்ததினம் மற்றும் சட்டமன்ற வைரவிழாவை முன்னிட்டு சென்னையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பங்கேற்கச்செய்யும் வகையில் தங்கள் பலத்தைக் காட்ட ஒரு மெகா ஷோ..   அது ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னோட்டமாக அமையும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனைகள்முடிந்துவிட்டது. .. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி, முன்னாள் சபாநாயகர் மீராகுமார் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
 இந்த முயற்சியில் . காங்கிரஸ் வெற்றி பெற்றால் , அது பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய அணியை உருவாக்கி விடும். அது 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆபத்தாகக் கூட முடியலாம்  என்பதைக் கணித்த பாஜக  மிக வேகமாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது.  மத்திய அரசின் அமைச்சர்கள் மாநிலங்களுக்கு அடிக்கடி பறக்கிறார்கள். அறிக்கை மழை கொட்டுகிறது
.தெலங்கானா மாநில நலனுக்காக பா.ஜனதா வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து விட்டார்.  வருமானவரி வழக்கில் சிக்கியிருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டார்.  வரும் வாரங்களில்  மேலும் சில கட்சிகள்   பா.ஜனதாவின் மறைமுக விளையாட்டில் சிக்கிவிடும் தற்போதைய சூழலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற 20 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே தேவை.

யார் நமது  அடுத்த ஜனாதிபதி ?


இதனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புதான் பிகாசமாகயிருக்கிறது.   அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா சுவராஜ், திரளெபதி மர்மு, மோகன்பகவத் பெயர்கள் அடிபட்டன. பகவத் மறுத்திருக்கிறார். அத்வானி மீது பாபர் மசூதி வழக்கு மறுபிறப்பெடுத்திருக்கிறது.   ஓடிசா மாநில பழங்குடி இனத் தலைவரும் தற்போதைய ஜார்கண்ட் கவர்னருமான திருமதி திரளெபதி மர்மு    இந்த அதிகாரமிக்க ஆசனத்தை அலங்கரிக்கலாம்.

23/5/17

இன்றைய உலகம் சந்திக்கும் இணையப் போர்


அண்மையில் ஒரே நாளில் 150 நாடுகளில்பல்கலைகழகங்கள்,மருத்துவ மனைகள்  தொழிற்சாலைகளின் 200000 கணினிகள்  ஒரு ரான்ஸ்ம்வேர்  வைரஸால் தாக்கப்பட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. பல கணணிகள் செயல் இழந்தன. சில பூட்டப்பட்டன, சிலவற்றில் இருந்தது அத்தனையும் அழிக்கப்பட்டிருந்தன  அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான ஃபெட் எகஸ்பிரஸ்,  ஸ்பெயினின் மொபையல் நிறுவனங்கள், இங்கிலாந்தின் மருத்துவமனை  நெட் ஒர்க் ஜெர்மனியின் ரெயில்வே நெட் ஒர்க், பிரான்ஸின் ரென்னால்ட் கார் நிறுவனம் ரஷ்ய உள்துறை அமைச்சகம் ஜப்பானில் பல தனியார் கணணிகள் சினாவில் 40,000 நிறுவனங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் இந்த ரான்சம் வேரால் தாக்கப்பட்டிருக்கிறது. கணனி பிறந்த போதே இம்மாதிரி ஆபத்துகளும் பிறந்துவிட்டன, ஆனால்  . உலக வரலாற்றில் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதல் என்று  “எஃப் செக்யூர்”  என்ற உலகின் முன்னணி கணணி  பாதுகாப்பு நிறுவனம் இதைக் குறிப்பிடுகின்றது. 
மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர்? கணினிகளில் நுழைந்த சில விநாடிகளிலே ஒட்டுமொத்த கணினியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகின்ற இந்த மால்வேரின் பெயர் ரான்சம்வேர்  
. நிஜ உலகில் கடத்தல்காரர்கள் யாரையாவது பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால்தான் விடுவிக்க முடியும் என மிரட்டுவது போல, இணைய உலகில் ஹேக்கர்கள் என்பவர்கள், பயனாளிகளின் கணினி உள்ளிட்ட சாதனங்கள் அல்லது அவற்றில் உள்ள முக்கியமான கோப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதை விடுவிக்கப் பணம் தர வேண்டும் என மிரட்ட இதைப் பயன்படுத்துவதால் இந்தப்பெயர். . 
நிஜ உலகக் கடத்தலுக்கும், இந்த வகைக் கடத்தலுக்கும் என்ன வேறுபாடு என்றால் இதில் விஷமிகள் எதையும் கடத்திச்செல்வதில்லை. மாறாகப் பயனாளிகளின் கணினிக்குள் அத்துமீறி நுழைந்து அதைப் பயன்படுத்த முடியாமல் செய்து விடுகின்றனர்.
இது புதிய மோசடி அல்ல. ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம் அதிகமாகிப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது ரான்சம்வேரில் பல வகைகள் இருக்கின்றன. கணினிக்குள் நுழைந்து அதைப் பயன்படுத்த முடியாமல் பூட்டுப்போட்டு விட்டுப் பணம் கேட்டு மிரட்டுவது ஒரு ரகம். இன்னொரு ரகம், முக்கியமான கோப்புகளை ‘என்கிரிப்ட்' செய்து விட்டு அதை விடுவிக்கப் பணம் கேட்டு மிரட்டுவது. கணினி என்றில்லை, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களையும் இப்படிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு  ஹேக்கர்ஸ் மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பெரிய வர்த்தக நிறுவனங்களே இவ்வாறு குறி வைக்கப்படுகின்றன.  என்றாலும் தனிமனிதர்களும் தப்பவில்லை.  இந்த ரான்சம்வேர் தாக்கிய கணினியில் ,  ‘பிட்காயின்’ என்கிற டிஜிட்டல் கரன்சி வடிவத்தில் குறிப்பிட்ட $300 (ரூ.19200) அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு இயக்கமுடியும். இல்லையெனில், தகவல்கள் அழிக்கப்படும் என மிரட்டும் வகையிலான அறிவிப்பு 28 மொழிகளில்  வருகிறது. ஏன் இந்த பிட்காயின் என்றால் இதில் அனுப்புபவர்களை எளிதில் அடையாளம் காணமுடியாது. வேறு வழியில்லாமல் இதை ஏற்றுகொண்டுவர்கள் பலர். இப்போது  இது அசுர வடிவம் எடுத்திருக்கிறது 
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த வகைத் தாக்குதல்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 
இதுமாதிரி ஏதோ ஒன்று வரப்போகிறது என்று சில வாரங்களுக்குமுன் செய்தி கசிந்தது.. ஆனால் இந்த விஸ்வரூபத்தை எவரும் எதிர்பார்க்கவில்லை. பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிகம் பாதிக்கப் படவில்லை(இந்தக் கட்டுரை எழுதும் வரை) சில பெரிய மென்பொருள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் அது அவர்கள் தொழில் ரகசியங்களையும் வியாபாரத்தையும் பாதிக்கும் என்பதால்  அறிவிக்கவில்லை என்றும் சொல்லுகிறார்கள். வங்கிகளுக்கு பாதிப்பில்லை  என்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் அறிவித்திருக்கிறார்கள்.
யார் இதைச் செய்திருக்கிறார்கள்?
“ ரஷ்ய அரசின் உள்துறை” என்கிறது அமெரிக்கா. “எதுவானாலும் எங்களைக் குற்றம் சொல்லுவதே இவர்களுக்கு  வேலயையாய் போச்சு  செய்திருப்பது அவர்களுடைய  உளவுத்துறைதான்” என்று அறிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புட்டின். 
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) விண்டோஸ் கணனிகளுக்குள் நுழைய, உருவாக்கிய,இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு இது நடந்திருக்கிறது. பாதுகாப்புத்துறை. அசட்டையாக இருந்ததால், அது  திருடப்பட்டு எதிரிகளின் கைகளுக்கு போய், இப்படியான தாக்குதல் சாத்தியமாகியுள்ளது என தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் எட்வர்ட் ஸ்னோடன்   இவர்  அமெரிக்காவின்  சூப்பர் கில்லாடி  ஹேக்கர். 
பெரிய நிறுவனங்களும், மருத்துமனை, அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டிருப்பதால் இது வெறும் பணம்  பிடுங்கும் சமாசாரம் இல்லை. “எங்களால் உங்கள் கணினிகளை உடைக்க முடியும் என்று காட்டும் செயல். அது தீவிரவாதிகளா? அல்லது  அடுத்தவர் துன்பத்தைக் கண்டு சந்தோஷிக்கும் கொடூரமான ஒரு குழு வா?” என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியிருக்கிறது. 
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பே இல்லையா ?
ஹேக்கர்களுக்கு இணையாக அதைச் சமாளிக்கும்  வித்தைகளைத் தெரிந்தவர்களும் நிறைந்தது இணைய உலகம். தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே  ஐரோப்பிய காவல்துறையான “யூரோபோல்” ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “ நோ-மோர் ரான்சம்” என்ற தளத்தை  உருவாக்கி உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்  பூட்டப்பட்ட உங்கள் கம்யூட்டரை திறக்கும் சாவியை நாங்கள் தருகிறோம். என்று அறிவித்திருக்கிறது. நெதர்லாந்து காவல்துறை மற்றும் இன்டெல் செக்யூரிட்டி மற்றும் காஸ்பெர்ஸ்கி லேப் ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்குத் தேவையான உதவியை இந்தத் தளம் அளிக்கிறது. ரான்சம்வேர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து ‘அப்டேட்' செய்யப்பட்டு வருகிறது 
 எது எப்படியோ? உலகின் எந்த கணணிக்குள் நுழையும் ஒரு சக்தி பிறந்திருக்கிறது என்பதும்   அது சிலரின் இன்று  விரல் நுனியில் இருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.  அது தேவதைகளின்  விரலா, அல்லது அசுரர்களுடையதா என்பது நாம் கணணியைத் திறக்கும் நேரத்தில் நமது அதிர்ஷ்டத்தைப் பொருத்த விஷயம்   


 இம்மாதிரி தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும். 
2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.
4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்களின் இழப்பைத் தடுக்கலாம்.
7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
8 ஈ மெயில்களில் எதேனும் இணையதளத்தின் லிங்க் கொடுக்கபடிருந்தால் அதை மெயிலில் இருந்து கிளிக் செய்து திறக்க வேண்டாம். அவசியமானால் அந்தத் தளத்தை நேரடியாகத் திறக்கலாம். ஆபத்தானதால் உங்கள் கணனி எச்சரிக்கும் 
 தினசரி கணினியை  ஆப்  செய்தபின்

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றைத் துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.
4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.
 எல்லா வற்றிற்கும் மேலாக இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
V,Ramanan
13-03-2017


11/5/17

அடுத்த கோஹினூர் வைரம்உங்களுக்குக் கிடைக்குமா?


இந்திய அரசியல் வரலாற்றில் சகா வரம்பெற்ற சில செய்திகள் உண்டு. அதில் ஒன்று கோஹினுர் வைரம். 



இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று வர்ணிக்கின்றனர். இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது.
அப்போது முதல் இந்த வைரம் பிரிட்டன் மன்னர் பரம்பரையின் சொத்தாக மாறியுள்ளது. தற்போது மகாராணியின் மகுடத்தில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது., ஆண்டு தோறும் லண்டனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது

.
105 காரட், 21 கிராம் எடையும் உள்ள இந்த  வைரத்தின் மதிப்பு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை. ஆனால் இது பதிக்கப்பட்டிருக்கும் கீரிடத்தின் மதிப்பை  இங்கிலாந்து அரசு அறிவித்திருப்பதால் அதிலிருந்து இதன் மதிப்பை ஒரு பில்லியன் டாலர்(6700 கோடிகள்) என மதிப்பிடுகிறார்கள்  
 பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தைப் பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையைப் பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே மத்திய அந்த  அரசு கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் “ஆல் இந்தியா ஹியூமன் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் பிரன்ட்” என்ற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்யதது. நீண்ட நாட்களுக்குப்பின் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "வெளிநாட்டு அரசாங்கத்துக்கு நாம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இத்தகைய மனுக்கள் அவசியமற்றது"  என்று தீர்ப்பளித்திருக்கிறார். 
இந்த வைரம் இனி இந்தியாவிற்குத் திரும்பவாய்ப்பில்லை என்ற நிலை எழுந்திருக்கும்  நேரத்தில்,  வெளியாகியிருக்கும் ஒரு செய்தி இந்த வைரம் கிடைத்த இடத்தில் வைரம் தேடும் வேட்டை இந்த  ஆண்டு திவிரமாகத் துவங்கியிருக்கிறது. 
விஜயவாடாவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லூர் கிராமம் இதுகிருஷ்ணா ஆற்றின் மீது  டாக்டர் KL ராவ் சாகர் நீர்ப்பாசன திட்டத்தினால் உருவான ஒரு அணையினால் முழ்கிய 2.லட்சம் சதுர கிலோமீட்டரில் மூழ்கிய   கிராமங்களில் ஒன்று. .  
இந்தக் கிராமமும் அதன் பகுதிகளும்  பல நூற்றாண்டுகளாக வைர சுரங்கமாக இருந்திருக்கிறது, குதுப் ஷாஹி வம்சத்தின் கீழ் அதன் தலைநகரமான கோல்கொண்டா வர்த்தகத்தின் ஒரு உலகளாவிய மையமாக இருந்திருக்கிறது மில்லியன் கணக்கான வைரங்கள் பல காரட்களில் 15லிருந்து 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான காலத்தில்  கொல்லூர் நகரத்தில் இருந்து வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோஹினூர் 16 ஆம் நூற்றாண்டின் போது வெட்டப்பட்டது மற்றும் கோல்கொண்டாவில் விற்பனை செய்யப்பட்டது. கொல்லூர்-பாரிடலா பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கங்கள் 1830 ஆம் ஆண்டு வரை செயல்பட்டன, ஆனால் அவை படிப்படியாக கைவிடப்பட்டன. 1990 களில் மாவோயிஸ்டுகள் இப்பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, ஏறக்குறைய 1,000 ஏக்கர் நிலப்பரப்பை ஏழைகளுக்கு  வழங்கினார்கள்.  பின்னர் 2004 ஆம் ஆண்டில்,  கிருஷ்ணாவின் தண்ணீரைத் தடுத்து  ஒரு பாசன நீர் திட்டத்தை ராஜசேகர ரெட்டி அரசாங்கம்  துவக்கியதின் விளைவாக கொல்லூர் உட்பட எல்லாக் கிராமங்களும் 50 அடி நீரில் முழ்கி கிடக்கிறது. அந்த கிராங்களில் வசித்தவர்களுக்கு மாற்று இருப்பிடங்கள், நிலங்கள் வழங்கப்பட்ட போதிலும் இந்த ஏரிக்கரை ஓரத்திற்கு  ஒவ்வொரு  கோடைக்காலத்திலும்  அந்த மக்கள் வருகிறார்கள்.  அவர்கள் மட்டுமில்லை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரிய வைர வியாபாரிகள் என்றும் பலரும் வருகிறார்கள்.
 எதற்குத்  தெரியுமா? அந்த ஆற்றின்  நீர் வற்றி கரைப்பகுதிகளிலிருக்கும் பாறைகளில் இடுக்குகளில் கிடைக்கும் அபூர்வ கற்களுக்காக. சுரங்கங்கள் அழிந்து பல காலங்கள் ஆனாலும் இன்னும்  வைரக்கற்கள் இருக்கின்றன என அவர்கள் நம்புகின்றனர். அவ்வப்போது  தொடர்ந்து கிடைக்கும் சில விலை மதிப்புள்ள கற்கள் இந்த நம்பிக்கையை  வலுவடையச்செய்கிறது.  
 இந்த பகுதியில் வாழும்  விவசாயக்கூலிகள், ஆடுமாடு மேய்ப்போருக்கு  இங்கு வைரக்கற்கள் தேடுவது ஒரு பார்ட் டைம் பிசினஸ். நீர்த்தேக்கத்தில் நீர் குறைய ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பிஸியாகி விடுவார்கள். கற்களை தேடிஎடுத்து சேமித்துக்கொள்வார்கள்.  பின்னர் வியாபாரிகளிடம் காட்டி விற்று விடுகிறார்கள். இதற்காகவே  இப்போது இங்கு  வெளி மாநிலங்களிருந்து வியாபாரிகள் வந்து அருகிலிருக்கும் குண்டூர், விஜயவாடா போன்ற இடங்களில்   தங்கி நேரடியாக  கூலிக்கு இவர்களை அமர்த்தி கற்களை சேகரிக்கிறார்கள். கற்கள் கிடைத்தவுடன் அவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கிறார்கள்.   நாள் கூலியைத்தவிர கொண்டுவரும் கற்களை ஆராய்ந்து அதற்கேற்ப நல்ல   விலையும்  தருகிறார்கள் என்கிறார் உள்ளூர் வங்கி மேலாளர் ஒருவர். 
ஒரு கல்லை எப்படி மதிப்பிடுகிறார்கள்? இதற்கான   நவீன எலக்டிரானிக் கருவிகளை இங்கு வரும்  வியாபாரிகள் கொண்டுவருகிறார்கள்.  முதல் சோதனையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கற்கள் அதில் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு  கிராம கமிட்டி தலைவர்,  தேடி  எடுத்தவர்கள்  முன்னிலையில் விலை நிர்ணயக்கபடுகிறது  

பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்க்கும் ஒரு சிறுமிக்கு கிடைத்த கல்லின் மதிப்பு 7 லட்சம்  என்றவுடன் அத்தனை கிராமங்களும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால் அந்தச் சிறுமியின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற  நிலை எழுந்தது, கடைசியில் போலீஸார் தலையிட்டினால் அந்த பெண்ணுக்கிடைத்தது 30, 000 ரூ  தான் என்கிறார்   இதில் ஈடுபட்டிருக்கும் ஒரு வியாபாரி. இந்த நிலையினால் இப்போது கிராம மக்கள் கூலிக்கு வைரங்களைத் தேடுவதையே விரும்புகிறார்கள் தனியாகப் போய் தேடபவர்களும் இருக்கிறார்கள் .  
 அரசின் அனுதி வேண்டாமா?  எந்த ஒரு நீர்ப் பாசன திட்டப்பகுதியின் நிலப்பரப்பும்  அரசுக்குச்சொந்தமானது. அதில் இப்படிப் போய்த் தேடுவது சட்டப்படி குற்றம்.  ஆனால் 40 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வைரத்தேடல் அரசால் அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை என்பதால்  ஆர்வத்துடன்  வருபவர்கள்  ஆண்டுதோறும் அதிகரிக்கிறார்கள்  முதல் முறையாக வருபவர்களுக்கு  பணம் வாங்கிக்கொண்டு வழிகாட்டியாக உதவ, உள்ளூர் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.  
நீங்களும் போய் முயற்சிக்கலாம்.   அடுத்த கோஹினூர் கிடைக்கும் அதிர்ஷடசாலி   ஒரு வேளை நீங்களாக   இருக்கலாமே